திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
நான்காம் திருமுறை
4.75 தனி – திருநேரிசை
தொண்டனேன் பட்ட தென்னே
    தூயகா விரியின் நன்னீர்
கொண்டிருக் கோதி யாட்டிக்
    குங்குமக் குழம்பு சாத்தி
இண்டைகொண் டேற நோக்கி
    ஈசனை எம்பி ரானைக்
கண்டனைக் கண்டி ராதே
    காலத்தைக் கழித்த வாறே.
1
பின்னிலேன் முன்னி லேன்நான்
    பிறப்பறுத் தருள்செய் வானே
என்னிலேன் நாயி னேன்நான்
    இளங்கதிர்ப் பயலைத் திங்கட்
சின்னிலா எறிக்குஞ் சென்னிச்
    சிவபுரத் தமர ரேறே
நின்னலால் களைகண் ஆரே
    நீறுசே ரகலத் தானே.
2
கள்ளனேன் கள்ளத் தொண்டாய்க்
    காலத்தைக் கழித்துப் போக்கித்
தெள்ளியே னாகி நின்று
    தேடினேன் நாடிக் கண்டேன்
உள்குவார் உள்கிற் றெல்லாம்
    உடனிருந் தறிதி யென்று
வெள்கினேன் வெள்கி நானும்
    விலாவிறச் சிரித்திட் டேனே.
3
உடம்பெனு மனைய கத்துள்
    உள்ளமே தகளி யாக
மடம்படும் உணர்நெய் யட்டி
    உயிரெனுந் திரிம யக்கி
இடம்படு ஞானத் தீயால்
    எரிகொள இருந்து நோக்கில்
கடம்பமர் காளை தாதை
    கழலடி காண லாமே.
4
வஞ்சப்பெண் ணரங்கு கோயில்
    வாளெயிற் றரவந் துஞ்சா
வஞ்சப்பெண் இருந்த சூழல்
    வான்றவழ் மதியந் தோயும்
வஞ்சப்பெண் வாழ்க்கை யாளன்
    வாழ்வினை வாழ லுற்று
வஞ்சப்பெண் ணுறக்க மானேன்
    வஞ்சனேன் என்செய் கேனே.
5
உள்குவார் உள்ளத் தானை
    உணர்வெனும் பெருமை யானை
உள்கினேன் நானுங் காண்பான்
    உருகினேன் ஊறி யூறி
எள்கினேன் எந்தை பெம்மான்
    இருதலை மின்னு கின்ற
கொள்ளிமேல் எறும்பென் னுள்ளம்
    எங்ஙனங் கூடு மாறே.
6
மோத்தையைக் கண்ட காக்கை
    போலவல் வினைகள் மொய்த்துன்
வார்த்தையைப் பேச வொட்டா
    மயக்கநான் மயங்கு கின்றேன்
சீத்தையைச் சிதம்பு தன்னைச்
    செடிகொள்நோய் வடிவொன் றில்லா
ஊத்தையைக் கழிக்கும் வண்ணம்
    உணர்வுதா உலக மூர்த்தீ.
7
அங்கத்தை மண்ணுக் காக்கி
    ஆர்வத்தை உனக்கே தந்து
பங்கத்தைப் போக மாற்றிப்
    பாவித்தேன் பரமா நின்னை
சங்கொத்த மேனிச் செல்வா
    சாதல்நான் நாயேன் உன்னை
எங்குற்றாய் என்ற போதா
    இங்குற்றேன் என்கண் டாயே.
8
வெள்ளநீர்ச் சடைய னார்தாம்
    வினவுவார் போல வந்தென்
உள்ளமே புகுந்து நின்றார்க்
    குறங்குநான் புடைகள் போந்து
கள்ளரோ புகுந்தீ ரென்னக்
    கலந்துதான் நோக்கி நக்கு
வெள்ளரோ மென்று நின்றார்
    விளங்கிளம் பிறைய னாரே.
9
பெருவிரல் இறைதா னூன்ற
    பிறையெயி றிலங்க அங்காந்
தருவரை அனைய தோளான்
    அரக்கனன் றலறி வீழ்ந்தான்
இருவரும் ஒருவ னாய
    உருவமங் குடைய வள்ளல்
திருவடி சுமந்து கொண்டு
    காண்கநான் திரியு மாறே.
10
திருச்சிற்றம்பலம்

திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
நான்காம் திருமுறை
4.76 தனி - திருநேரிசை
மருளவா மனத்த னாகி
    மயங்கினேன் மதியி லாதேன்
இருளவா அறுக்கும் அந்தை
    இணையடி நீழ லென்னும்
அருளவாப் பெருத லின்றி
    அஞ்சிநான் அலமந் தேற்குப்
பொருளவாத் தந்த வாறே
    போதுபோய்ப் புலர்ந்த தன்றே.
1
மெய்ம்மையாம் உழவைச் செய்து
    விருப்பெனும் வித்தை வித்திப்
பொய்ம்மையாங் களையை வாங்கிப்
    பொறையெனும் நீரைப் பாய்ச்சித்
தம்மையும் நோக்கிக் கண்டு
    தகவெனும் வேலி யிட்டுச்
செம்மையுள் நின்ப ராகிற்
    சிவகதி விளையு மன்றே.
2
எம்பிரான் என்ற தேகொண்
    டென்னுளே புகுந்து நின்றிங்
கெம்பிரான் ஆட்ட ஆடி
    என்னுளே உழிதர் வேனை
எம்பிரான் என்னைப் பின்னைத்
    தன்னுளே கரக்கு மென்றால்
எம்பிரான் என்னி னல்லால்
    என்செய்கேன் ஏழை யேனே.
3
காயமே கோயி லாகக்
    கடிமனம் அடிமை யாக
வாய்மையே தூய்மை யாக
    மனமணி இலிங்க மாக
நேயமே நெய்யும் பாலா
    நிறையநீர் அமைய வாட்டிப்
பூசனை ஈச னார்க்குப்
    போற்றவிக் காட்டி னோமே.
4
வஞ்சகப் புலைய னேனை
    வழியறத் தொண்டிற் பூட்டி
அஞ்சலென் றாண்டு கொண்டாய்
    அதுவுநின் பெருமை யன்றே
நெஞ்சகங் கனிய மாட்டேன்
    நின்னையுள் வைக்க மாட்டேன்
நஞ்சிடங் கொண்ட கண்டா
    என்னென நன்மை தானே.
5
நாயினுங் கடைப்பட் டேனை
    நன்னெறி காட்டி ஆண்டாய்
ஆயிரம் அரவ மார்த்த
    அமுதனே அமுத மொத்து
நீயுமென் னெஞ்சி னுள்ளே
    நிலாவினாய் நிலாவி நிற்க
நோயவை சாரு மாகில்
    நோக்கிநீ அருள்செய் வாயே.
6
விள்ளத்தா னொன்று மாட்டேன்
    விருப்பெனும் வேட்கை யாலே
வள்ளத்தேன் போல நுன்னை
    வாய்மடுத் துண்டி டாமே
உள்ளத்தே நிற்றி யேனும்
    உயிர்ப்புளே வருதி யேனுங்
கள்ளத்தே நிற்றி அம்மா
    எங்ஙனங் காணு மாறே.
7
ஆசைவன் பாச மெய்தி
    அங்குற்றே னிங்குற் றேனாய்
ஊசலாட் டுண்டு வாளா
    உழந்துநான் உழித ராமே
தேசனே தேச மூர்த்தி
    திருமறைக் காடு மேய
ஈசனே உன்றன் பாதம்
    ஏத்துமா றருளெம் மானே.
8
நிறைவிலேன் நேச மில்லேன்
    நினைவிலேன் வினையின் பாச
மறைவிலே புறப்பட் டேறும்
    வகையெனக் கருளெ னெம்மான்
சிறையிலேன் செய்வ தென்னே
    திருவடி பரவி யேத்தக்
குறைவிலேன் குற்றந் தீராய்
    கொன்றைசேர் சடையி னானே.
9
நடுவிலாக் காலன் வந்து
    நணுகும்போ தறிய வொண்ணா
அடுவன அஞ்சு பூதம்
    அவைதமக் காற்ற லாகேன்
படுவன பலவுங் குற்றம்
    பாங்கிலா மனிதர் வாழ்க்கை
கெடுவதிப் பிறவி சீசீ
    கிளரொளிச் சடையி னீரே.
10
திருச்சிற்றம்பலம்

திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
நான்காம் திருமுறை
4.77 தனி – திருநேரிசை
கடும்பகல் நட்ட மாடிக்
    கையிலோர் கபால மேந்தி
இடும்பலிக் கில்லந் தோறு
    முழிதரும் இறைவ னீரே
நெடும்பொறை மலையர் பாவை
    நேரிழை நெறிமென் கூந்தற்
கொடுங்குழை புகுந்த வன்றுங்
    கோவண மரைய தேயோ.
1
கோவண முடுத்த வாறுங்
    கோளர வசைத்த வாறுந்
தீவணச் சாம்பர் பூசித்
    திருவுரு இருந்த வாறும்
பூவணக் கிழவ னாரைப்
    புலியுரி அரைய னாரை
ஏவணச் சிலையி னாரை
    யாவரே எழுது வாரே.
2
விளக்கினாற் பெற்ற இன்பம்
    மெழுக்கினாற் பதிற்றி யாகுந்
துளக்கில்நன் மலர்தொ டுத்தால்
    தூயவிண் ணேற லாகும்
விளக்கிட்டார் பேறு சொல்லின்
    மெய்ஞ்ஞெறி ஞான மாகும்
அளப்பில கீதஞ் சொன்னார்க்
    கடிகள்தாம் அருளு மாறே.
3
சந்திரற் சடையில் வைத்த
    சங்கரன் சாம வேதி
அந்தரத் தமரர் பெம்மான்
    ஆன்நல்வெள் ளூர்தி யான்றன்
மந்திரம் நமச்சி வாய
    ஆகநீ றணியப் பெற்றால்
வெந்தறும் வினையும் நோயும்
    வெவ்வழல் விறகிட் டன்றே.
4
புள்ளுவர் ஐவர் கள்வர்
    புனத்திடைப் புகுந்து நின்று
துள்ளுவர் சூறை கொள்வர்
    தூநெறி விளைய வொட்டார்
முள்ளுடை யவர்கள் தம்மை
    முக்கணான் பாத நீழல்
உள்ளிடை மறைந்து நின்றங்
    குணர்வினா லெய்ய லாமே.
5
தொண்டனேன் பிறந்து வாளா
    தொல்வினைக் குழியில் வீழ்ந்து
பிண்டமே சுமந்து நாளும்
    பெரியதோர் அவாவிற் பட்டேன்
அண்டனே அமரர் கோவே
    அறிவனே அஞ்ச லென்னாய்
தெண்டிரைக் கங்கை சூடந்
    திகழ்தரு சடையி னானே.
6
பாறினாய் பாவி நெஞ்சே
    பன்றிபோல் அளற்றிற் பட்டுத்
தேறிநீ நினைதி யாயின்
    சிவகதி திண்ண மாகும்
ஊறலே உவர்ப்பு நாறி
    உதிரமே யொழுகும் வாசல்
கூறையால் மூடக் கண்டு
    கோலமாக் கருதி னாயே.
7
இப்பதிகத்தில் எட்டாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
8
இப்பதிகத்தில் ஒன்பதாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
9
உய்த்தகால் உதயத் தும்பர்
    உமையவள் நடுக்கந் தீர
வைத்தகா லரக்க னோதன்
    வான்முடி தனக்கு நேர்ந்தான்
மொய்த்தகான் முகிழ்வெண் டிங்கள்
    மூர்த்தியெ னுச்சி தன்மேல்
வைத்தகால் வருந்து மென்று
    வாடிநான் ஒடுங்கி னேனே.
10
திருச்சிற்றம்பலம்

திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
நான்காம் திருமுறை
4.113 தனி திருவிருத்தம்
வெள்ளிக் குழைத்துணி போலுங்
    கபாலத்தன் வீழ்ந்திலங்கு
வெள்ளிப் புரியன்ன வெண்புரி
    நூலன் விரிசடைமேல்
வெள்ளித் தகடன்ன வெண்பிறை
    சூடிவெள் ளென்பணிந்து
வெள்ளிப் பொடிப்பவ ளப்புறம்
    பூசிய வேதியனே.
1
உடலைத் துறந்துல கேழுங்
    கடந்துல வாததுன்பக்
கடலைக் கடந்துய்யப் போயிட
    லாகுங் கனகவண்ணப்
படலைச் சடைப்பர வைத்திரைக்
    கங்கை பனிப்பிறைவெண்
சுடலைப் பொடிக்கட வுட்கடி
    மைக்கண் துணிநெஞ்சமே.
2
முன்னே யுரைத்தால் முகமனே
    யொக்குமிம் மூவுலகுக்
கன்னையும் அத்தனு மாவா
    யழல்வணா நீயலையோ
உன்னை நினைந்தே கழியுமென்
    னாவி கழிந்ததற்பின்
என்னை மறக்கப் பெறாயெம்
    பிரானுன்னை வேண்டியதே.
3
நின்னையெப் போது நினையலொட்
    டாய்நீ நினைய்புபகிற்
பின்னையப் போதே மறப்பித்துப்
    பேர்த்தொன்று நாடுவித்தி
உன்னையெப் போதும் மறந்திட்
    டுனக்கின் தாயிருக்கும்
என்னையொப் பாருள ரோசொல்லு
    வாழி இறையவனே.
4
முழுத்தழல் மேனித் தவளப்
    பொடியன் கனகக்குன்றத்
தெழிற்பெருஞ் சோதியை எங்கள்
    பிரானை யிகழ்ந்தீர் கண்டீர்
தொழப்படுந் தேவர் தொழப்படு
    வானைத் தொழுதபின்னை
தொழப்படுந் தேவர்தம் மால்தொழு
    விக்குந்தன் தொண்டரையே.
5
விண்ணகத் தான்மிக்க வேதத்
    துளான்விரி நீருடுத்த
மண்ணகத் தான்திரு மாலகத்
    தான்மரு வற்கினிய
பண்ணகத் தான்பத்தர் சித்தத்
    துளான்பழ நாயடியேன்
கண்ணகத் தான்மனத் தான்சென்னி
    யானெங் கறைக்கண்டனே.
6
பெருங்கடல் மூடிப் பிரளயங்
    கொண்டு பிரமனும்போய்
இருங்கடல் மூடி இறக்கும்
    இறந்தான் களேபரமுங்
கருங்கடல் வண்ணன் களேபர
    முங்கொண்டு கங்காளராய்
வருங்கடல் மீளநின் றெம்மிறை
    நல்வீணை வாசிக்குமே.
7
வானந் துளங்கிலென் மண்கம்ப
    மாகிலென் மால்வரையுந்
தானந் துளங்கித் தலைதடு
    மாறிலென் தண்கடலும்
மீனம் படிலென் விரிசுடர்
    வீழிலென் வேலைநஞ்சுண்
டூனமொன் றில்லா ஒருவனுக்
    காட்பட்ட உத்தமர்க்கே.
8
சிவனெனும் நாமந் தனக்கே
    யுடையசெம் மேனியெம்மான்
அவனெனை ஆட்கொண் டளித்திடு
    மாகில் அவன்றனையான்
பவனெனு நாமம் பிடித்துத்
    திரிந்துபன் னாளழைத்தால்
இவனெனைப் பன்னாள் அழைப்பொழி
    யானென் றெதிர்ப்படுமே.
9
என்னையொப் பாருன்னை எங்ஙனம்
    காண்பர் இகலியுன்னை
நின்னையொப் பார்நின்னைக் காணும்
    படித்தன்று நின்பெருமை
பொன்னையொப் பாரித் தழலை
    வளாவிச்செம் மானஞ்செற்று
மின்னையொப் பார மிளிருஞ்
    சடைக்கற்றை வேதியனே.
10
திருச்சிற்றம்பலம்

திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
நான்காம் திருமுறை
4.114 தனி திருவிருத்தம்
பவளத் தடவரை போலுந்திண்
    டோள்களத் தோள்மிசையே
பவளக் குழைதழைத் தாலொக்கும்
    பல்சடை அச்சடைமேற்
பவளக் கொழுந்தன்ன பைம்முக
    நாகமந் நாகத்தொடும்
பவளக்கண் வால மதியெந்தை
    சூடும் பனிமலரே.
1
முருகார் நறுமலர் இண்டை
    தழுவிவண் டேமுரலும்
பெருகா றடைசடைக் கற்றையி
    னாய்பிணி மேய்ந்திருந்த
இருகாற் குரம்பை யிதுநா
    னுடைய திதுபிரிந்தாற்
தருவாய் எனக்குன் திருவடிக்
    கீழோர் தலைமறைவே.
2
மூவா உருவத்து முக்கண்
    முதல்வமீக் கூரிடும்பை
காவா யெனக்கடை தூங்கு
    மணியைக்கை யாலமரர்
நாவா யசைத்த வொலியொலி
    மாறிய தில்லையப்பாற்
தீயாய் எரிந்து பொடியாய்க்
    கழிந்த திரிபுரமே.
3
பந்தித்த பாவங்கள் அம்மையிற்
    செய்தன இம்மைவந்து
சந்தித்த பின்னைச் சமழ்ப்பதென்
    னேவந் தமரர்முன்னாள்
முந்திச் செழுமல ரிட்டு
    முடிதாழ்த் தடிவணங்கும்
நந்திக்கு முந்துற ஆட்செய்கி
    லாவிட்ட நன்னெஞ்சமே.
4
அந்திவட் டத்திளங் கண்ணிய
    னாறமர் செஞ்சடையான்
புந்திவட் டத்திடைப் புக்குநின்
    றானையும் பொய்யென்பனோ
சந்திவட் டச்சடைக் கற்றை
    யலம்பச் சிறிதலர்ந்த
நந்திவட் டத்தொடு கொன்றை
    வளாவிய நம்பனையே.
5
உன்மத் தகமலர் சூடி
    உலகந் தொழச்சுடலைப்
பன்மத் தகங்கொண்டு பல்கடை
    தோறும் பலிதிரிவான்
என்மத் தகத்தே இரவும்
    பகலும் பிரிவரியான்
தன்மத் தகத்தோர் இளம்பிறை
    சூடிய சங்கரனே.
6
அரைப்பா லுடப்பன கோவணச்
    சின்னங்கள் ஐயமுணல்
வரைப்பாவை யைக்கொண்ட தெக்குடி
    வாழ்க்கைக்கு வானிரைக்கும்
இரைப்பா படுதலை யேந்துகை
    யாமறை தேடுமெந்தாய்
உரைப்பார் உரைப்பன வேசெய்தி
    யாலெங்கள் உத்தமனே.
7
துறக்கப் படாத உடலைத்
    துறந்துவெந் தூதுவரோ
டிறப்பன் இறந்தால் இருவிசும்
    பேறுவன் ஏறிவந்து
பிறப்பன் பிறந்தாற் பிறையணி
    வார்சடைப் பிஞ்ஞகன்பேர்
மறப்பன்கொ லோவென்றென் னுள்ளங்
    கிடந்து மறுகிடுமே.
8
வேரி வளாய விரைமலர்க்
    கொன்றை புனைந்தனகன்
சேரி வளாயவென் சிந்தை
    புகுந்தான் திருமுடிமேல்
வாரி வளாய வருபுனற்
    கங்கை சடைமறிவாய்
ஏரி வளாவிக் கிடந்தது
    போலும் இளம்பிறையே.
9
கன்னெடுங் காலம் வெதும்பிக்
    கருங்கடல் நீர்சுருங்கிப்
பன்னெடுங் காலம் மழைதான்
    மறுக்கினும் பஞ்சமுண்டென்
றென்னொடுஞ் சூளறும் அஞ்சல்நெஞ்
    சேயிமை யாதமுக்கண்
பொன்னெடுங் குன்றமொன் றுண்டுகண்
    டீரிப் புகலிடத்தே.
10
மேலு மறிந்திலன் நான்முகன்
    மேற்சென்று கீழிடந்து
மாலு மறிந்திலன் மாலுற்ற
    தேவழி பாடுசெய்யும்
பாலன் மிசைச்சென்று பாசம்
    விசிறி மறிந்தசிந்தைக்
கால னறிந்தான் அறிதற்
    கரியான் கழலடியே.
11
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com